அண்மையில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கியில் மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக ஐநா மனிதாபிமான பயிற்சி பெற்ற மருத்துவர்கள் மற்றும் பொறியியலாளர்கள் அடங்கிய இராணுவக் குழுவை அனுப்ப அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட துருக்கி மக்களுக்கான மனிதாபிமான உதவிகளை வழங்குவது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்றது.
அரச நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையினரின் பங்களிப்புடன் இந்த தருணத்தில் துருக்கி மக்களுக்கு அத்தியாவசிய அடிப்படை வசதிகள் மற்றும் தொழிலாளர் பங்களிப்பை எவ்வாறு வழங்குவது என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், லெபனான் ஊடாக சிரியாவுக்கான மனிதாபிமான உதவிகளை வழங்குவது தொடர்பாகவும் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் அலி சப்ரி மற்றும் நசீர் அஹமட் ஆகியோர் அமைச்சுக்களின் செயலாளர்கள், தலைவர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
துருக்கி-சிரியா நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21,500ஐ கடந்துள்ளது. துருக்கியில் குறைந்தது 18,342 பேர் கொல்லப்பட்டுள்ளனர், நாட்டின் அதிகாரிகளின் கூற்றுப்படி, சிரியாவில் குறைந்தது 3,377 பேர் இறந்ததாக அறியப்படுகிறது.