தீவிரவாதி என்ற குற்றச்சாட்டின் பேரில் தடுத்து வைக்கப்பட்ட, தாருல் அதர் பள்ளிவாசல் முன்னாள் தலைவர் யாசின் பாவா அப்துல் ரவூப் சிறைச்சாலையில் உயிரிழந்துள்ளார்.
அவர் நான்கு வருடங்களுக்கு மேலாக சிறைவாழ்வை அனுபவித்து வந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடாத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் குறித்து குற்றம் சாட்டப்பட்டுள்ள 25 பிரதிவாதிகளில் இவரும் ஒருவர்.
17 ஆவது பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள காத்தான்குடியைச் சேர்ந்த இவர் திடீர் சுகயீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவர் அங்கு நேற்று இரவு உயிரிழந்துள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர், சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
‘குறித்த கைதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றிருந்தார். பின்னர் அவர் சிகிச்சைகளை முடித்துக்கொண்டு சிறைச்சாலைக்கு திரும்பியிருந்தார்.
அதன் பின்னர் மீண்டும் சுகயீன நிலையால் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
மரணத்துக்கான காரணத்தை கண்டறிய பிரேத பரிசோதனைகளை முன்னெடுக்கவுள்ளோம்.’ என சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க குறிப்பிட்டார்.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில், 268 பேரின் மரணம், 594 பேரின் படு காயங்களுக்கு காரணமானவர்கள் என்ற ரீதியில் 25 பேருக்கு எதிராக சட்ட மா அதிபரால் கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடை சட்டத்தின் பிரகாரம் சதி, தாக்குதலுக்கு தயாரானமை, உதவி மற்றும் ஊக்குவித்தல், வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் சேகரிப்பு, கொலை மற்றும் கொலை முயற்சி போன்ற 23270 குற்றச்சாட்டுக்களை உள்ளடக்கியதாக இந்த குற்றப்பத்திரிகை வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கைது செய்யப்பட்டு 31 மாதங்களுக்கு மேல் தடுத்து வைக்கப்பட்டிருந்த கல்முனையைச் சேர்ந்த 42 வயது மொஹமட் ஸாலி மொஹமட் நளீம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிறுநீரக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த வருடம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.