2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த மனுவை மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் நிராகரித்தது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்து அந்த வழக்குகளில் இருந்து தன்னை விடுவித்து உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி மைத்திரிபால சிறிசேன இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.
எவ்வாறாயினும், இந்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதியரசர்களான சஞ்சீவ மொராயிஸ் மற்றும் பிராங்க் குணவர்தன ஆகியோரால் நிராகரிக்கப்பட்டது.
ஜனவரி 2023 இல், 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட முன்னாள் அரசாங்க அதிகாரிகள் குழுவிற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னதாக உளவுத்துறை தகவல் இருந்தும் உயிர்த்த தாக்குதலை தடுக்க தவறியதாக சிறிசேன மற்றும் பலருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை அறிவிக்கும் போதே உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதனையடுத்து மைத்திரிபால சிறிசேனவுக்கு 100 மில்லியன் ரூபா அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டதுடன் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ உயிர்த்த தாக்குதலில் பலியானவர்களுக்கு 50 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்குமாறும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அத்துடன், அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு தலா 75 மில்லியன் ரூபா செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. , தேசிய புலனாய்வு தலைவர் சிசிர மெண்டிஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக 10 மில்லியன் செலுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், கத்தோலிக்க மதகுருமார்கள் மற்றும் பலர் தாக்கல் செய்த 12 மனுக்கள் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான 7 பேர் கொண்ட அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பின்னரே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களால் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நட்டஈடு தொடர்பான அனைத்து வழக்குகளிலிருந்தும் தன்னை விடுவிக்க உத்தரவிடுமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றில் மேன்முறையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.