ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக இந்தாண்டு வெசாக் கொண்டாட்டமானது தேசிய ரீதியில் பிரமாண்டமாக கொண்டாடப்படும் என ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று “புத்த ரஷ்மி தேசிய வெசாக் விழா” தொடர்பான ஆரம்ப கலந்துரையாடலின் போது, ஜனாதிபதியின் செயலாளர் விழாவை சிறப்பாக கொண்டாடுவதற்கான திட்டங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
புத்த ரஷ்மி தேசிய வெசாக் விழா மே 5, 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் கொழும்பு கங்காராம விகாரை , ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது.
தேசிய வெசாக் வலயமாக பெயரிடும் பல நிகழ்ச்சிகளுடன் இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வணக்கத்துக்குரிய கிரிந்தே அஸ்ஸாஜி தேரர் தெரிவித்தார்.
வெசாக் போயா தினமான மே 5 ஆம் திகதி , கங்காராம விகாரையில் சில் நிகழ்வு கடைப்பிடிப்பதுடன், வெசாக் வலயத்தில் கொடிகள், தீபங்கள், விளக்குகள் மற்றும் மின்விளக்குகளால் அலங்கரித்தல், மலர் ஊர்வலங்கள் நடத்துதல், பந்தல்கள் மற்றும் விளக்குகளை காட்சிப்படுத்துதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளுடன் ஏற்பாடு செய்யப்படவுள்ளது.
பக்தி கீதா (பக்திப் பாடல்கள்) ஓதுதல் ஜனாதிபதி செயலகம் மற்றும் கங்காராம விகாரையின் பிரதான மேடைக்கு அருகாமையிலும், வெசாக் தன்சல் கங்காராம விகாரை மற்றும் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகாமையிலும் இடம்பெறவுள்ளது.
இந்த வருட “புத்த ரஷ்மி தேசிய வெசாக் விழா” ஒரு முன்மாதிரியான வெசாக் பண்டிகையாக இருக்கும் என வணக்கத்திற்குரிய கலாநிதி கிரிந்தே அஸ்ஸாஜி தேரர் தெரிவித்துள்ளார்.
சுற்றுலா பயணிகளை கவரவும், நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும் வெசாக் பண்டிகை ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.
குறிப்பாக நாட்டின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மை அடைந்து வரும் காலகட்டத்தில், இது நேர்மறையான மனநிலையை வளர்க்க உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“புத்த ரஷ்மி வெசாக் வலயத்தின்” வெற்றியை உறுதி செய்வதற்காக, அரச மற்றும் தனியார் துறைகளின் ஆதரவைப் பெறுவதற்கு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அரசாங்க அதிகாரிகள், பாதுகாப்புத் தலைவர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.