நாளை (20ஆம் திகதி) முதல் உள்ளூராட்சி நிறுவனங்களும் பொதுமக்களுக்கு தொடர்ந்து சேவையை வழங்கவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர தெரிவித்துள்ளார்.
அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் ஏற்கனவே எடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
340 உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடைகிறது.
அதன்படி, அந்த நிறுவனங்களின் அனைத்து நிர்வாக நடவடிக்கைகளும் நாளை (20) முதல் ஆணையர்கள் மற்றும் செயலாளர்களின் கீழ் கொண்டுவரப்படும்.
2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலைத் தொடர்ந்து உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் 340 உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களின் பதவிக்காலம் அந்த ஆண்டு மார்ச் 20 ஆம் திகதி ஆரம்பமானது.
எல்பிட்டிய உள்ளூராட்சி சபைக்கு மட்டும் தனித் தேர்தல் நடத்தப்பட்டதன் காரணமாக, அதன் உத்தியோகபூர்வ பதவிக்காலம் 2018 ஒக்டோபர் மாதம் ஆரம்பமானது.
340 உள்ளூராட்சி நிறுவனங்களின் உத்தியோகபூர்வ காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது.
அந்த நிறுவனங்களின் உறுப்பினர்களின் பதவிக் காலத்தை நீட்டிக்க அமைச்சருக்கு அதிகாரம் இல்லை என்பதாலும், இதுவரை உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறாததாலும், அச்சபைகள் அரசு அதிகாரிகளின் கீழ் கொண்டு வரப்படும்.
இதன்படி, 29 மாநகர சபைகளின் அதிகாரம் மாநகர ஆணையாளர்களின் கீழும், 36 மாநகர சபைகள் மற்றும் 275 உள்ளூராட்சி சபைகளின் அதிகாரம் அந்த நிறுவனங்களின் செயலாளர்களின் கீழும் இருக்கும்.
எல்பிட்டிய உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் பதவிக்காலம் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துடன் நிறைவடைகிறது.