வரியை நீக்கியமையால் தான் நாடு வங்குரோத்து அடைந்தது என்றும் ஒரு நாள் தொழிற்சங்க நடவடிக்கை மூலம் சாதிக்கப்போவது என்ன? என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கேள்வியெழுப்பியுள்ளார்.
இன்றைய தினம் (01) தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கே ஜனாதிபதி மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.
இதன்போது, வரியை நீக்கி நாடு நெருக்கடியில் விழுந்ததுடன் அதனை நிவர்த்தி செய்யும் வகையில் தான் இன்று மீண்டும் வரியை விதித்துள்ளோம்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் தொழிற்சங்கங்கள் உள்ளன. ஆனால், எதிர்க்கட்சிகளின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குள் சில தொழிற்சங்கங்கள் சிக்கியுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், வங்குரோத்து அடைந்துள்ள எமது நாடு மெல்ல மெல்ல மீண்டெழுந்து வருகின்ற நிலையில் தொழிற்சங்க நடவடிக்கை எதற்கென்று குறித்த தொழிற்சங்கங்களிடம் கேட்க விரும்புகின்றேன்.
ஒரு நாள் தொழிற்சங்க நடவடிக்கை மூலம் நீங்கள் சாதிக்கப்போவது என்ன? மின் கட்டணத்தில் அதிகரிப்பை மேற்கொள்ளாமல் மின் விநியோகத்தைச் சீராக மேற்கொள்ள முடியாது. தற்போதைய நிலைமையில் ஓரிரு மாதங்களுக்கு விலைவாசி உயர்வு தவிர்க்க முடியாதது.
எல்லாவற்றுக்கும் சர்வதேசத்திடம் நாம் கையேந்தி நிற்க முடியாது. நாம் மெல்ல மெல்லச் சொந்தக் காலில் நிற்கப் பழகிக்கொள்ள வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.