அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து துறைமுகம், எண்ணெய், மின்சாரம், வங்கிகள் போன்ற பல துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் இன்று (01) சுகயீன விடுப்பில் ஈடுபட்டுள்ளதுடன், போராட்டங்களிலும் தொழிற்சங்க நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
சுமார் 40 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நீர், வங்கிகள், ரயில்வே, பல்கலைக்கழகங்கள், தொலைத்தொடர்பு மற்றும் பிற துறைகளில் உள்ள தொழிற்சங்கங்களும் இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளில் இணைந்து கொள்கின்றன.
இந்த தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவாக மருத்துவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், தபால் ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் தாம் வேலைநிறுத்தம் செய்யவில்லை, கறுப்பு அணிந்து கடமைக்கு சமூகமளிப்போம், மதிய உணவு இடைவேளையின் போது போராட்டத்தில் ஈடுபடுவோம் என ஆசிரியர்கள், அதிபர்கள் அறிவித்துள்ளனர்.
அதன்படி இன்று பல நிறுவனங்களின் பணியாளர்கள் கறுப்பு உடை அணிந்து கடமைக்கு வந்தனர்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று மாத்திரம் போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக அதன் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த தொழிற்சங்க நடவடிக்கைக்கு ரயில்வே தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.