முஸ்லிம்கள் தொடர்பில் மன்னாரில் தான் பேசியதை தேவையற்ற முறையில் வர்ணித்து ஒரு தரப்பு அவதூறு பரப்பி வருவதாக தவராசா கலையரசன் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் இவ்விடயம் தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மன்னாரில் இடம்பெற்ற எமது கட்சி கூட்டத்தில் நான் முஸ்லிம்கள் குறித்து பேசியுள்ளதாக சில செய்திகள் பரப்பப்பட்டுள்ளன. சில தரப்பினர் இவ்விடயத்தை முன்னெடுப்பதை நான் அறிகின்றேன்.
முஸ்லிம்கள் குறித்து அவ்வாறு எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. இதனை மறுக்கின்றேன்.எமது கட்சியில் உள்ள உள்ளக விடயங்களை நாங்கள் கலந்துரையாடி இருந்தோம்.அதன் அடிப்படையில் சில குற்றச்சாட்டுக்களை அங்கு தெரிவித்து கலந்துரையாடினோம் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் பொய்யான விடயங்களை திட்டமிட்டு பிரசுரித்துள்ளனர். கல்முனை விடயத்தையும் இக்கூட்டத்தில் பேசினேன். இதர தமிழ் முஸ்லிம் கட்சி தொடர்பிலும் இக்கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டது.
இவ்விடயம் தொடர்பில் எமது கட்சி தலைமையிடமும் பேசவுள்ளேன். இவ்வாறு செய்தி வதந்திகளை பரப்புவது இரு தரப்பினரை குழப்புவதுடன் பிரச்சினைகளையும் ஏற்படுத்த திட்டமிடப்படுகின்றது’ என குறிப்பிட்டார்.