நலன்புரி கொடுப்பனவுகளுக்கு தகுதியானவர்களை அடையாளம் காணும் கணக்கெடுப்பு நடவடிக்கைகளில் இருந்து அரச ஊழியர்கள் விலக்கப்பட்டிருப்பது வருத்தமளிக்கும் நிலை என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரதமர், இந்த கணக்கெடுப்புகளை நடத்துவது அரச ஊழியர்களின் பொறுப்பாகும் என குறிப்பிட்டார்.
இதற்கிடையில், நலத்திட்ட உதவித் தொகை பெறத் தகுதியானவர்களைக் கண்டறியும் ஆய்வுகள் இம்மாதம் 31ஆம் திகதியுடன் முடிவடைவதால், சரியான தரவுகளை விரைவில் அதிகாரிகளுக்கு வழங்குமாறு அரச நிதி அமைச்சு விண்ணப்பதாரர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
இதுவரை பெறப்பட்ட 37 இலட்சம் விண்ணப்பங்களில் சுமார் 11 இலட்சம் விண்ணப்பங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் 334 பிரதேச செயலகங்களில் இருந்து பெறப்பட்ட 37 இலட்சம் விண்ணப்பங்களின் நலன்புரி கொடுப்பனவுகளுக்கான தகுதிச் சரிபார்ப்பு தற்போது கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
சரிபார்க்கப்பட்டு, இறுதி செய்யப்பட்ட விண்ணப்பங்களில் அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பங்கள் களுத்துறை மாவட்டத்தில் பதிவாகியுள்ளன, இது 46% என நிதி இராஜாங்க அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
உரிய திகதிக்கு முன்னர் சரியான தகவல்களை வழங்கத் தவறும் விண்ணப்பதாரர்கள் நலத்திட்ட உதவிகளை இழக்க நேரிடும் என்றும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.