இலங்கையின் கரையோரப் பகுதியில் சுற்றாடல் பாதிப்பைக் குறைக்கும் நோக்கில், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி செயலகத்தின் பிரதானியுமான சாகல ரத்நாயக்க இன்று (12) உத்தியோகபூர்வமாக ஒரு வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.
கரையோரங்களில் இருந்து குப்பைகளை அகற்ற இயந்திரங்களைப் பயன்படுத்துவதையும் இந்த வேலைத்திட்டம் உள்ளடக்கியது, மேலும் இதன் ஆரம்ப நிகழ்வு இன்று மட்டக்குளியில் உள்ள காக்கை தீவு கடற்கரையில் நடைபெற்றது.
கடல் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை, கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, மத்திய சுற்றாடல் அதிகார சபை, சுற்றாடல் பொலிஸ், இலங்கை கடற்படை மற்றும் துடாவே பிரதர்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியன இணைந்து இந்த நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன.
இதன்போது கருத்துத் தெரிவித்த சாகல ரத்நாயக்க, இலங்கை அழகிய கடற்கரைகள், சூழல் மற்றும் கலாசார பாரம்பரியம் காரணமாக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. எனவே, அடுத்த தலைமுறைக்கு சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதுடன், கடற்கரையையும் பாதுகாப்பதன் மூலம் சுற்றுலாத் துறைக்கு பங்களிப்பது அனைவரின் பொறுப்பு என்றார்.