2019 பெப்ரவரி 14 இல் நடந்த புல்வாமா தாக்குதல்கள் தொடர்பில் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் ஆளுநர் சத்ய பால் மாலிக் வெளியிட்டுள்ள தகவல்கள்,
இந்தச் சம்பவத்தை மோடி அரசு இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதறகுப் பயன்படுத்தியுள்ளது என்பதை நிரூபிக்கிறது என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சு நேற்று (16) விடுத்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புல்வாமா தற்கொலைத் தாக்குதல்கள் தொடர்பில் ஜம்மு காஷ்மீரின் இந்திய சார்பு முன்னாள் ஆளுநர் வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் அவர் ஊடகமொன்றுக்குப் பேட்டியளிக்கும் போது இது எமது தவறினாலேயே நடந்தது என நான் அன்று மாலையே பிரதமருக்குத் தெரிவித்தேன்.
அவர் எமக்கு விமானங்களைத் தந்திருந்தால் இது நடந்திருக்காது. இது தொடர்பில் வாய் திறக்கக் கூடாது என அவர் எனக்கு உத்தரவிட்டார் எனக் கூறியிருந்தார்.
தனது வகுப்புத் தோழரான தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாலும் கூட இதனை வெளியிட வேண்டாமென என்னிடம் கூறினார் எனவும் முன்னாள் ஆளுநர் சத்ய பால் மாலிக் போட்டுடைத்துள்ளார்.
அண்மைய தகவல்களால் எழுகின்ற கேள்விகளுக்கு இந்தியா பதிலளிக்க வேண்டும் எனக் கூறும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சின் ஊடக அறிக்கை, புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து பிராந்திய அமைதியில் ஏற்பட்ட குந்தகங்களுக்கு இந்தியா பொறுப்பேற்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
2019 இல் புல்வாமாவில் ரோந்து சென்ற இந்திய பாதுகாப்புப் படைமீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 40 பேர் கொல்லப்பட்டனர்.
இந்தப் படுகொலைக்கு இந்தியா பாகிஸ்தானைக் குற்றம் சாட்டியிருந்த நிலையிலேயே ஜம்மு காஷ்மீரின் இந்திய ஆளுநரின் இந்தத் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.