அமைதியும் நல்லிணக்கமும் வலிமைப்பெற உறுதியேற்போம் என தமிழ்நாடு மனிதநேய ஜனநாயக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மு. தமிமுன் அன்சாரி ஈகைத்திருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
உலகமெங்கும் கொண்டாடப்படும் இன்பத் திருநாட்களில் ஈதுல் ஃபித்ர் எனும் நோன்பு பெருநாள் முதன்மையானது. ரமலான் மாதம் முழுவதும் இறையச்சத்தோடு நோன்பிருந்து அதன் நிறைவாக இப்பெருநாள் கொண்டாடப்படுகிறது.
நீலவானத்தில் தோன்றும் மெல்லிய வெண்பிறையை வசந்தத்தின் வருகையாக கருதி; உலகமெங்கும் கொண்டாட்டங்கள் தொடங்குகிறது.
இறை உவப்பை நாடி, ஏழைகளை தேடி வீதிகளில் ஓடி ஓடி செய்யும் உதவிகள் இப்பெருநாளை ஈகைத்திருநாளாக முன்னிறுத்துகிறது.
மகிழ்ச்சியை வெளிப்படுத்தி; செல்வங்களை பகிர்ந்தளித்து இப்பெருநாளை உலகமெங்கும் 200 கோடி மக்கள் கொண்டாடுகிறார்கள். இந்திய திருநாட்டில் 25 கோடி மக்களின் இதயத்திருநாளாகவும் இப்பெருநாள் திகழ்கிறது.
இந்நன்னாளில் தாய்மண்ணை துறந்து வாடும் அகதிகளின் நலன்களுக்காகவும், சிறைகளில் கதறி அழும் அப்பாவிகளின் விடுதலைக்காகவும், வறுமையோடு மோதி காயப்படும் ஏழைகளின் மேன்மைக்காகவும் இறைவனிடம் பிரார்த்திப்போம்.
மேலும், நமது தாய் மண்ணில் அமைதியும், நல்லிணக்கமும் வலிமைப்பெற உறுதியேற்போம் என வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.