இலங்கையின் எரிபொருள் சில்லறை சந்தைக்குள் பிரவேசிப்பது தொடர்பாக, அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெற்றோலிய நிறுவனத்துடன், இணையவழி பேச்சுவார்த்தையை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு நிறைவு செய்துள்ளதாக, அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தை தனது டுவிட்டர் கணக்கில் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எரிபொருள் விற்பனை உடன்படிக்கைகள், அரசாங்கக் கொள்கைகள், தளவாடங்கள் மற்றும் இலங்கையில் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கான காலக்கெடு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
யுனைடெட் பெற்றோலியம் அடுத்த வாரத்தில் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் திகதிகளை தெரிவிக்கும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு, நிதி அமைச்சு, இலங்கை மத்திய வங்கி, முதலீட்டுச் சபை ,இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் Ceylon Petroleum Storage Terminals Limited (CPSTL) ஆகியவற்றின் அதிகாரிகள் இக்கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளனர்.