இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் நிர்வாக மற்றும் நிதி பிரச்சினைகளை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட மூவரடங்கிய இடைக்கால குழு தனது அறிக்கையை விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவிடம் நாளை கையளிக்கவுள்ளது.
கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜனி தலைமையில் விசேட குழுவொன்றை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நியமித்துள்ளார்.
2012 ஆம் ஆண்டு முதல் கால்பந்து அரசியலமைப்பு தயாரிப்பதில் ஏற்பட்ட தாமதம், நிதி நிர்வாகம் மற்றும் ஆட்சேர்ப்பு பணியாளர்கள் போன்றவை குறித்து குழு ஆய்வு செய்து அறிக்கை தயாரித்துள்ளதாக விளையாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை கடந்த ஜனவரி 21, அன்று, சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (FIFA) FIFA கவுன்சிலின் பணியகம் எடுத்த முடிவின்படி, அரசியல் தலையீடு காரணமாக இலங்கை கால்பந்து சம்மேளனம் மறு அறிவிப்பு வரும் வரை இடைநீக்கம் செய்வதாக அறிவித்தது.
இந்நிலையில் இலங்கை கால்பந்து சம்மேளனம் FIFA சட்டங்களின் 13வது பிரிவில் வரையறுக்கப்பட்டுள்ள அதன் அனைத்து உறுப்பினர் உரிமைகளையும் இழந்தமை குறிப்பிடத்தக்கது.