உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் அரசாங்கம் இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் தொடர்பான மூன்று நாள் பாராளுமன்ற விவாதத்தில் இன்று காலை கலந்து கொண்ட ஜனாதிபதி,
வெளிநாட்டு கடனாளிகளுடனான கலந்துரையாடல்களை ஆரம்பிக்கும் போது, இலங்கை தனது உள்நாட்டு கடன்களை மறுசீரமைப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்க வேண்டும் என்றார்.
சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதற்கான அனுமதியை அனைவரும் நாடாளுமன்றில் பெற்றுக் கொடுக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளார்.
நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பதற்கு சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதை தவிர மாற்று வழியொன்று இல்லை.
மாற்று வழியொன்று இல்லாத நிலையில், யாரும் அவ்வாறான வழிமுறையொன்றை முன்வைக்காத போதே, சர்வதேச நாணய நிதியத்திடம் செல்ல நடவடிக்கை எடுத்திருந்தோம்.
நாட்டின் நலனுக்காக அனைவரும் ஒன்றிணைந்து இதற்கான அனுமதியை நாடாளுமன்றில் பெற்றுக் கொடுக்க வேண்டும். இதனை தற்போது செய்யாவிட்டால் நாட்டின் இளைய தலைமுறையை காட்டிக்கொடுத்தது போலாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் முழு நாடாளுமன்றமும் அரசாங்கமாக மாறி எதிர்வரும் 2048ஆம் ஆண்டு வரை ஒரு கொள்கையொன்றில் பயணிப்பதற்கான வேலைத்திட்டமொன்றை ஆரம்பிப்போம். ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி என்று பாராமல் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை முன்னெடுத்துச் செல்வோம்.
தற்போது பல தொழிற்சங்கங்களுக்கு வரி உள்ளிட்ட பல விடயங்களில் பிரச்சினைகள் உள்ளன. அவற்றை பேசித் தீர்த்துக் கொள்வோம். 6 மாதங்களுக்கு ஒருமுறை “தேசிய சபை” போன்றவற்றின் ஊடாக இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சிப்போம் என கூறியுள்ளார்.