எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு போக்குவரத்து வசதிகளை எவ்வித பிரச்சினைகளும் இன்றி வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக நாட்டிலுள்ள பிரதான பயணிகள் போக்குவரத்து சேவை வழங்குநர்கள் இன்று அறிவித்துள்ளனர்.
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டைக் கொண்டாடும் வகையில் பயணிகள் தமது சொந்த ஊர்களுக்கு செல்வதற்கான அனைத்து போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்துள்ளார்.
புத்தாண்டுக்கு முன்னும் பின்னும் பயணிகள் அந்தந்த இடங்களுக்குச் செல்வதற்கும் அங்கிருந்து செல்வதற்கும் முக்கிய நகரங்களை உள்ளடக்கிய பஸ்களை வழங்குமாறு அனைத்து வீதி போக்குவரத்து சேவைத் தலைவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு மத்திய பஸ் நிலையம் மற்றும் அதிவேக நெடுஞ்சாலை முனையங்களில் புத்தாண்டு விசேட பஸ் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டுக்கான விசேட பஸ் சேவை ஏப்ரல் 07 ஆம் திகதி ஆரம்பமாகி 18 ஆம் திகதி வரை தொடரும். ஆரம்பத்தில் சுமார் 150 பஸ்கள் சேவையில் ஈடுபடும் மேலும் 250 பஸ்கள் ஏப்ரல் 11, 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் இயங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சேவைகளின் தேவையை கருத்திற்க் கொண்டு பஸ்கள் ஒதுக்கப்படும்.
புத்தாண்டுக்கு முன்னரும் பின்னரும் அதிவேக நெடுஞ்சாலைகளில் கொழும்பிலிருந்து மற்றும் கொழும்பிற்கு பஸ் சேவைகளை நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, புத்தாண்டுக்கு முன்னரும் பின்னரும் போக்குவரத்தை வழங்குவதற்கு பெருமளவான பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், தற்போதைய புகையிரத சாரதிகளின் பற்றாக்குறை மற்றும் புத்தாண்டுக்காக தற்போதுள்ள பெரும்பாலான ஊழியர்களின் விடுமுறை கோரிக்கை காரணமாக, இந்த பண்டிகையின் போது ரயில் சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக இலங்கை ரயில்வே திணைக்களத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.