சமுர்த்தியைப் பெறும் குடும்பங்களில் சுமார் 33 வீதமான குடும்பங்கள், சமுர்த்தியின் பயனைப் பெற தகுதியற்ற குடும்பங்கள் என அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவான கோபா குழுவில் கண்டறியப்பட்டுள்ளது.
அதே அளவான குடும்பங்கள் சமுர்த்தியைப் பெறவேண்டியிருக்கின்ற போதும், அவற்றுக்கு சமுர்த்தி கிடைப்பதில்லை என்றும் கோபா குழுவில் புலப்பட்டுள்ளது.
2015 ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் நாடு முழுவதையும் உள்ளடக்கும் விதத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் ஊடாக இது தெரியவந்திருப்பதாகவும், 4 இலட்சத்து 49 ஆயிரத்து 979 குடும்பங்கள் சமுர்த்தி பயனாளிகளிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், சமுர்த்தி பயனாளிகளைத் தேர்வு செய்யும் போது முறைகேடு இடம்பெற்றிருப்பது தெரியவந்திருப்பதாக தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சமுர்த்தி திணைக்களத்தின் 2019, 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் செயலாற்றுகை அறிக்கை குறித்து ஆராயும் நோக்கில் கோபா குழு, கடந்த தினம் கூடியபோது, இந்த விடயங்கள் தெரியவந்துள்ளன. அத்துடன், சமுதாயம் சார் வங்கிகளில் மாதாந்தம் செலுத்தப்படும் சமுர்த்தி பயனாளிகளுக்கான கொடுப்பனவுத் தொகை சில சமுர்த்திப் பயனாளிகளால் மாதாந்தம் பெறப்படாமல் நீண்டகாலம் வங்கிக் கணக்குகளில் காணப்படுகின்றன.
சமுதாயம் சார் 10 வங்கிப் பிரிவுகளில் உள்ள 41 வங்கிகளில், 2 ஆயிரத்து 433 சமுர்த்திப் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் 5 கோடியே 99 இலட்சத்து 51 ஆயிரத்து 237 ரூபா பணம் தேங்கிக்கிடந்ததாகவும் கோபா குழுவில் புலப்பட்டுள்ளது.
மேலும், சமுர்த்தி அதிகாரசபையை திணைக்களமாக மாற்றிய போது அங்கிருந்த ஊழியர்களின் எண்ணிக்கையை உள்ளடக்கியமை குறித்தும் கோபா குழு வினவியதுடன், சரியான தரவுகள் சமர்ப்பிக்கப்படாததால், மே மாதம் 26ஆம் திகதி கோபா குழுவின் முன் அந்தத் திணைக்களத்தை மீள அழைக்குமாறு பரிந்துரைக்கப்பட்டது.