கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றிய நிலையில், முதலமைச்சர் பதவிக்கு சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவியது.
இதுதொடர்பாக கடந்த சில நாட்களாக டெல்லியில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன. அப்போது, டி.கே.சிவக்குமாரை பல்வேறு வகைகளில் காங்கிரஸ் மேலிடம் சமாதானப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார்.
ஒரே ஒரு துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் இருப்பார் என்றும், வரும் மக்களவைத் தேர்தல் வரை கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவியில் அவர் நீடிப்பார் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் நாளை மறுநாள் (20) பெங்களூருவில் பதவியேற்பு விழா பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.
அதற்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ள நிலையில் இன்று இரவு மீண்டும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் முதல்வர் குறித்து அதிகாரப்பூர்வமாக காங்கிரஸ் தலைமை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.