ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னர் புத்தளம் பகுதியில் இயங்கி வந்த புத்தளம் அல் சுஹைரியா மத்ரஸா மாணவர்களுக்கு விரிவுரை வழங்கிய இரண்டு விரிவுரையாளர்கள் உட்பட நால்வரை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே நேற்று உத்தரவிட்டார்.
குறித்த மத்ரஸாவில் விரிவுரை நிகழ்த்தியதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட சந்தேக நபர்கள் நால்வர் தொடர்பிலான சாட்சியங்களின் சுருக்கத்தை 31 ஆம் திகதிக்கு முன்னர் முன்வைக்க வேண்டும் என்று கோரியே நீதவான் இந்த உத்தரவை விடுத்துள்ளார்.
மத்ரஸாவில் விரிவுரை வழங்கிய சந்தேக நபர்களான அனஸ் அன்வர் மற்றும் மொஹமட் ஜுசைல் அப்துல் ஹமீட் ஜாபர் ஆகிய இருவரும் அப்போது அந்த இடத்தில் தங்கியிருந்த முகமது அசிபட் அபுபக்கர் சித்திக் மற்றும் மத்ரஸாவுக்கு காணி வழங்கிய ராவுத்தர் நெய்னா அசனாத் மரக்கார் ஆகியோருமே விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
உலக வர்த்தக மையத்தின் மீதான பயங்கரவாதத் தாக்குதல்கள், பாலஸ்தீன யுத்தம் உள்ளிட்ட உலகில் நடக்கும் யுத்தங்கள் தொடர்பில் வரலாற்று அறிக்கைகளை முன்வைத்து அந்த மத்ரஸாவில் பயின்ற மாணவர்களுக்கு இந்த சந்தேகநபர்கள் போர் மனப்பான்மையை ஏற்படுத்தியதாக அப்பள்ளியில் படித்த மாணவர்களின் வாக்குமூலத்தை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது என நீதிமன்றத்துக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.