கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளை அடுத்த மாதத்திற்குள் நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
2 பாடங்களுக்கான விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
மேலும் 6 பாடங்களின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி ஆரம்பமாகியுள்ளதுடன் ஏனைய பாடங்களின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் அடுத்த வாரமளவில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் 10 மத்திய நிலையங்களில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உயர்தர பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை முன்னெடுக்கவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
பாடசாலைகளில் கற்பித்தல் செயற்பாடடுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் ஆசிரியர்களை அதற்காக பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. விடைத்தாள்கள் மதிப்பீட்டின் போது செயன்முறை பரீட்சைகளுக்கு தேவையான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.