முஸ்லிம் சமூகத்தின் மீது அவதூறு பரப்பும் விதமாக எடுக்கப்பட்டுள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ என்ற திரைப்படத்தை தடை செய்ய கோரி தமிழ்நாட்டின் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
அதற்கமைய நேற்று மத்திய சென்னை மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி சார்பாக, சென்னை – திருமங்கலத்தில் உள்ள ஏசு மால் திரையரங்கத்தின் முன்பாக மாவட்ட செயலாளர் பிஸ்மில்லாகான் தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
இதில் மனிதநேய ஜனநாயக கட்சி மாநில செயலாளர் பல்லாவரம் ஷஃபி, மாநிலத் துணைச் செயலாளர் அஸாருதீன், மெரினா போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் ஜல்லிக்கட்டு ஜலீல் ஆகியோர் பங்கேற்று கண்டன கோஷம் எழுப்பினர்.
பின்னர் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் அஸாருதீன் அவர்கள், ‘இப்படம் தடை செய்யும் வரை போராட்டங்கள் தொடரும்’ என்றும் அறிவித்தார்.
தொடர்ச்சியாக ஏசு மால் திரையரங்கத்தை நோக்கி முன்னேற முயன்ற மஜகவினரை பொலிஸார் தடுத்ததால் சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இந்த போராட்டத்தில் தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் தாம்பரம் தாரிக், மாணவர் இந்தியா மாநில தலைவர் பஷீர், மருத்துவ சேவை அணி மாநில செயலாளர் அப்துர் ரஹ்மான், ஆதுவுளு மாநில துணை செயலாளர் மாத்தூர் இப்ராஹிம், ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.