துருக்கியின் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்கள் மே 14ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அந்நாட்டின் ஜனாதிபதி ரஜப் தையிப் அர்தூகானின் நேற்றைய பேரணியில் குறைந்தது 1.7 மில்லியன் மக்கள் கலந்துகொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 21 வருடங்களாக தேர்தல்கள் மூலம் துருக்கியை ஆளுகின்ற நடப்பு ஜனாதிபதி அர்தூகானுக்கான ஆதரவை இந்தப் பேரணி எடுத்துக் காட்டுவதாக அந்த ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
திரண்டிருந்த பெருந்திரளான மக்களைப் பாராட்டிய ஜனாதிபதி அர்தூகான், கடந்த 21 ஆண்டுகளில் தனது அரசாங்கத்தின் சாதனைகளை மக்களுக்கு நினைவூட்டினார்.
மேலும், தனது அரசாங்கம் கடந்த இரண்டு தசாப்தங்களில் தேசிய வருமானத்தை மூன்று மடங்காக உயர்த்தியுள்ளதாகவும் வேலைவாய்ப்புக்கள், உணவு, மற்றும் 10.5 மில்லியன் புதிய வீடுகளை யும் கட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
துருக்கிய ஜனாதிபதிப் பதிக்காக மீண்டும் தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி ரஜப் தையிப் அர்துகானுடன், கெமல் கிலிக்டரோக்லு, முஹர்ரம் இன்ஸ் மற்றும் சினான் ஓகன் ஆகியோரும் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர்.