இலங்கையில் பாடசாலை மாணவர்களில் மூன்றில் ஒரு பங்கினருக்கு அதாவது, 14 இலட்சத்துக்கும் அண்மித்த எண்ணிக்கையிலான மாணவர்கள் போதியளவில் காலை உணவை உண்பதில்லை என நாடாளுமன்ற உறுப்பினரும் துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவருமான காமினி வலேபொட சுட்டிக்காட்டியுள்ளார்.
காலை உணவைத் தவிர்ப்பது குழந்தைகளின் மூளை மற்றும் உடல் வளர்ச்சியில் மிகவும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக சோதனைகள் மூலம் தகவல் வெளியாகியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஐந்தில் ஒரு பங்கு சிறுவர்கள் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டில் நிலவும் மோசமான பொருளாதார நிலைமையே சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் மற்றும் வன்முறைகள் அதிகரிப்பதற்கு பிரதான காரணமாகும் எனவும் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், இறப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக சுட்டிக்காட்டினார்.
இன்று பிள்ளைகளுக்கு உணவளிக்கும் பொறுப்பு பெற்றோருக்கு பாரியதாகிவிட்டதாகக் கூறும் காமினி வலேபொட, பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாக குழந்தைகளுக்கு முன்பைப் போன்று சத்தான புலால் உணவையும் மரக்கறி உணவையும் வழங்குவதற்கு பெற்றோரால் முடியவில்லை.
இதன் காரணமாக, எதிர்வரும் காலங்களில் குழந்தைகளிடையே போஷாக்கு குறைபாடுகள் அதிகரிக்கலாம் என சுகாதாரத் திணைக்களம் எச்சரித்துள்ளது.