இலங்கையில் இலத்திரனியல் ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் பந்துல குணவர்தன இன்று தெரிவித்தார்.
இதற்காக ஒலிபரப்பு அதிகாரசபை சட்டம் உருவாக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவை உபகுழுவினால் தயாரிக்கப்பட்ட வரைபு விரைவில் பகிரங்கப்படுத்தப்படும்.
இந்த வரைவு தொடர்பாக பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளதுடன், நீதியமைச்சர் எதிர்வரும் வாரங்களில் பொது மற்றும் தனியார் பங்குதாரர்களுடன் கலந்துரையாடல்களை ஆரம்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்துத் துறையினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சட்டக் கட்டமைப்பான இந்த வரைவு அனைத்து ஊடக நிறுவனங்களுக்கும் ஒளிபரப்பு ஊடகங்களுக்கும் வழங்கப்படவுள்ளது என்றார்.
தற்போது இலங்கையானது சர்வதேச நடைமுறைகளுக்கு இணங்காமல் அதிர்வெண்களை வெளியிட்டு வருவதை அவதானித்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இலங்கை தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு வழங்கப்படும் அரச தொலைக்காட்சிச் சட்டமானது கடந்த காலங்களில் குறிப்பாக தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளுக்காக தொடர்ச்சியாக தவறாகப் பயன்படுத்தப்பட்டது.
ஆளும் கட்சி உறுப்பினர்கள் தனியார் ஊடகங்களை கட்டுப்படுத்துமாறு பலமுறை கோரிக்கை விடுத்து வரும் நிலையில், தற்போது சமூக ஊடகங்களையும் கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளும் அதிகரித்து வருகின்றன என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.