அரசாங்கத்தின் பிரதேச கிராம சேவகர் பிரிவுகளில் சகவாழ்வு சங்க உருவாக்கத்தினூடாக சமாதானத்தைக் கட்டி எழுப்புதல் என்ற வகையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்த நீதி அமைச்சர் மற்றும் அவரது குழுவினர் காத்தான்குடி அல் அக்ஸா பெரிய ஜூம்ஆ பள்ளிவாயலை நேற்று (27) சனிக்கிழமை பார்வையிட்டனர்.

பள்ளிவாயலின் பிரதம பேஷ் இமாம் அஷ்ஷெய்க் அல்ஹாபிழ் எம்.எம்.எம் இல்ஹாம் (பலாஹி) அவர்களின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ. உவைஸ் அவர்கள் உரையாற்றினார்கள்.
பள்ளிவாயல் கட்டடக்கலை பற்றியும் சகவாழ்வு சமூக நல்லிணக்கத்தை பள்ளிவாயலூடாக கட்டியெழுப்பப்படுவதையும் சுட்டிக்காட்டியதுடன் இதன் நிர்மாணப் பணியை முழுமையாக பூர்த்தி செய்த கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் அவர்களையும் ஞாபகமூட்டினார்.

இதன்போது அனைத்து நிருவாக உறுப்பினர்கள் மற்றும் பள்ளிவாயல் சுற்றுப் பயணக்குழு உறுப்பினர்களின் முழுமையான பங்கேற்புடன் நடைபெற்ற இந்த நிகழ்வில் நீதி அமைச்சர் விஷேட உரை நடாத்தியதுடன் நிருவாக உறுப்பினர்களால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

மேலும் அறபு எழுத்தணியினால் அவரது பெயர் எழுதப்பட்டு ஞாபகார்த்தமாக வழங்கப்பட்டதுடன் பள்ளிவாயலில் முழுமையாக சுற்றிப் பார்த்து பள்ளிவாயலில் நடைபெற்ற ழுஹர் தொழுகையையும் அவதானித்தார்.