சவூதி அரேபிய இலங்கை நட்புறவை மேம்படுத்தும் வகையிலான சவூதி இலங்கை பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் ஒன்பதாவது பாராளுமன்றத் தலைவராக சுற்றாடல் அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவு செய்யப்பட்டார்.
கடந்த புதனன்று (10) பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்ற இதற்கான நிகழ்வின் போதே இந்தத் தெரிவு நடைபெற்றது.
இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் மேன்மை தங்கிய காலித் பின் ஹமூத் பின் நாஸர் அல் கஹ்தானி கௌரவ அதிதியாகக் கலந்து கொண்ட இந்நிகழ்வில் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக்க உட்பட அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
2002 முதல் செயற்பட்டு வருகின்ற சவூதி – இலங்கை பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் உப தலைவர்களாக மத விவகார அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி. அலவத்துவல, பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷர்ரப் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
சங்கத்தின் செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனும் உதவிச் செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மானும் தெரிவாகினர்.
பொருளாளராக பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவு செய்யப்பட்டார்.
நிகழ்வில் உரையாற்றிய கௌரவ சபாநாயகர் மஹிந்த யாபா, சவூதி அபிவிருந்தி நிதி (SFD) ஊடாக இலங்கையின் நீர்வசதிகள், சுகாதாரம், கல்வி, வீதி அபிவிருத்தி என 425 மில்லியன் டொலர்கள் பெறுமதியான குறைந்தது 15 அபிவிருத்திக் கடன்களை பெற்றுக் கொண்டுள்ளது எனவும், PBC (பேராதெனிய, பதுளை, செங்கலடி) ஹைவேயை நிர்மாணிப்பதில் சவூதி அரேபியா பெரும்பங்கு வகித்திருக்கிறது எனவும் தெரிவித்தார்.