துருக்கியில் ஐனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது.
இதில் தற்போதைய ஜனாதிபதி அர்தூகானும், எதிர்க்கட்சி கூட்டணி சார்பில் கெமால் கிலிக்டரோக்லுவும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் மொத்தம் 91 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
இந்நிலையில் ஜனாதிபதி அர்தூகான் தனது டுவிட்டர் பதிவில் கருத்து வெளியிட்டுள்ளார்.
PKK/FETÖ பயங்கரவாதிகள், சமூக ஊடகப் பதிவுகள் மற்றும் வெளிநாட்டு ஊடகங்களின் அரசியல் கையாளுதல் முயற்சிகள் இருந்தபோதிலும், துருக்கி தனது சுதந்திரத்தை பாதுகாத்தது என்று ஜனாதிபதி கூறினார்.
மக்களின் தொலைநோக்கு பார்வையால் தேர்தல்கள் சிறந்த முறையில் நடைபெற்றதாகக் குறிப்பிட்ட அவர், துருக்கி நாடு தேர்தலில் தெளிவான வெற்றியாளராக உருவெடுத்துள்ளது என்றார்.
49.51% வாக்குகளைப் பெற்று துருக்கி பாராளுமன்றத்தில் முன்னணி தேர்தல் கூட்டணியாக உருவெடுத்தமைக்காக ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.
“தேர்தல்களில் ஜனநாயக முதிர்ச்சியுடன், துருக்கி மிகவும் மேம்பட்ட ஜனநாயக கலாச்சாரம் கொண்ட நாடுகளில் ஒன்றாகும் என்பதை நிரூபித்துள்ளது,” என்று ஜனாதிபதி கூறினார்.
மக்களின் விருப்பத்தை எப்போதும் அங்கீகரித்து மதித்து நடப்பவர் என்ற வகையில், தேர்தல் முடிவுகளுக்கு மதிப்பளிப்பதாகவும், ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளான மே 28ஆம் திகதி வரை பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காக இரவு பகலாக உழைக்கப் போவதாகவும் அவர் கூறினார்.
மே 14 முதல் நமது வாக்குகளை விஞ்சி வரலாற்று வெற்றியை அடைவோம், மே 28 அன்று வெற்றி பெறுவோம் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
64.1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாக்களிக்கப் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இதில் 1.76 மில்லியனுக்கும் அதிகமான வெளிநாடுகளில் ஏற்கனவே வாக்களித்தவர்கள் மற்றும் 4.9 மில்லியன் புதிய வாக்காளர்கள் உள்ளனர்.
நாட்டில் வாக்காளர்களுக்காக மொத்தம் 191,885 வாக்குப் பெட்டிகள் அமைக்கப்பட்டன. மீண்டும் தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி ரசெப் தையிப் அர்தூகான், முன்னணி எதிர்க்கட்சி வேட்பாளர் கெமல் கிலிக்டரோஸ்லு மற்றும் சினான் ஓகன் ஆகியோருக்கு இடையே போட்டி நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.