சுகாதார அமைச்சின் 259 வாகனங்கள் வெளிதரப்பினருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக பொது கணக்குகளுக்கான பாராளுமன்றக் குழுவின் (கோபா குழு ) தலைவர் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
அதன்படி, சுகாதார அமைச்சின் 1794 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவற்றுள், 679 மோட்டார் வாகனங்களும், 1115 மோட்டார் சைக்கிள்களும் உள்ளடங்குவதாக கண்டறியப்பட்டுள்ளது.
பெரும்பாலான கார்கள் தற்போது சுகாதார அமைச்சிடம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த கணக்காய்வின் மூலமாக 425 வாகனங்கள் தொடர்பான தகவல்களை வெளிக்கொணர முடிந்துள்ளதோடு, அவை தொடர்பில் முறைகேடுகள் எதுவும் நடந்துள்ளதா என்பதை கண்டறிவது கடினமாக உள்ளதாக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
1115 மோட்டார் சைக்கிளில் 11 மோட்டார் சைக்கிள்கள் பற்றிய தகவல்கள் மட்டுமே தெரியவந்துள்ளன.
மேலும், இவற்றில் பெரும்பாலான மோட்டார் சைக்கிள்கள் கள அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை ஜனாதிபதி செயலகத்துக்கு சொந்தமான 51 வாகனங்கள் காணாமல்போயுள்ளதாகவும், இந்த வாகனங்களின் பெறுமதி தொடர்பான தகவல்களோ அல்லது இந்த வாகனங்கள் பற்றிய தகவல்களை தேடியறிய முடியவில்லை என, தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவிக்கிறது.
ஜனாதிபதி செயலகத்தின் 2022ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.