சர்ச்சைக்குரிய மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, சட்டமா அதிபரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் குறித்து மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டது.
போதகர் ஜெரோம் பெர்னாண்டோ, நிரம்பிய சபைக்கு முன்பாக புத்தர், இஸ்லாம் மற்றும் இந்து மதம் தொடர்பாக அவதூறான அறிக்கைகளை வழங்கியதன் பின்னர் பொலிஸாரால் தேடப்பட்டு வருகிறார்.
அவரது கருத்துகளின் வீடியோ காட்சிகள் நாட்டில் பௌத்த மதத்தை பின்பற்றுபவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த சர்ச்சையை அடுத்து போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தனது சர்ச்சைக்குரிய கருத்துக்கு மன்னிப்பு கேட்டார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) கடந்த மே 15ஆம் திகதி போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றில் பயணத் தடையைப் பெற்றுக்கொண்ட போதிலும், போதகர் அதற்கு முன்னரே நாட்டை விட்டு வெளியேறியமை தெரியவந்துள்ளது.
போதகர் ஜெரோம் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி அடிப்படை உரிமைகள் (FR) மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.