நாட்டிலிருந்து தப்பியோடிய பின்னர் பதவியை இராஜினாமா செய்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அரசாங்கம் புதிய உத்தியோகபூர்வ இல்லம் ஒன்றினை வழங்கியுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்றிக்கு வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட கொழும்பு – 7, ஸ்டன்மோ சந்ரவன்ச மாவத்தையில் அமைந்துள்ள வீடே இவ்வாறு கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த வீட்டை கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்க, வெளிவிவகார அமைச்சர் அலி சப்றி இணக்கம் தெரிவித்த நிலையில், அது அவருக்கு இவ்வாறு வழங்கப்பட்டதாக அரச தகவல்கள் தெரிவித்தன.
மக்கள் போராட்டத்தை தொடர்ந்து, நாட்டிலிருந்து தப்பிச் சென்ற பின்னர் பதவி துறந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அவரது மனைவி அயோமா ராஜபக்ஷ ஆகியோர் மீண்டும் நாடு திரும்பியிருந்தனர்.
மாலைதீவு, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்தில் 50 நாட்களை கழித்த பின்னர், கோட்டாபய ராஜபக்ஷ இவ்வாறு கடந்த 2022 செப்டம்பர் 2 ஆம் திகதி நள்ளிரவு 11.40 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக மீள நாட்டுக்கு இவ்வாறு வந்தார்.
அதன் பின்னர் அங்கிருந்து அவர் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மறு நாள் 2022 செப்டம்பர் 3ஆம் திகதி அதிகாலை 12.50 மணிக்கு, கொழும்பு 7 , பெளத்தாலோக்க மாவத்தைக்கு முகப்பாக அமைந்துள்ள மலலசேகர மாவத்தையில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு இல்லத்துக்கு வருகை தந்தார்.
அது முதல் அந்த வீட்டிலேயே கோட்டாபய ராஜபக்ஷ இருந்தார். அவ்வீடு அரசால், கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டது. எனினும் அவ்வீட்டுக்கு அவ்வளவாக கோட்டாபய ராஜபஜ்க்ஷ விருப்பம் தெரிவிக்கவில்லை.
அவ்வீடு அமையப் பெற்றுள்ள இடத்தின் தன்மை மற்றும் அதிக சப்தத்தை மையப்படுத்தி வேறு ஒரு வீட்டை கோட்டாபய ராஜபக்க்ஷ சார்பில் கோரப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே தற்போது, பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரியான ஜெனரால் சவேந்ர சில்வா மற்றும் விமானப்படை தளபதி சுதர்ஷன பத்திரன ஆகியோரின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு அருகே அமையப் பெற்றுள்ள கொழும்பு – 7, ஸ்டன்மோ சந்ரவன்ச மாவத்தையில் கோட்டாவுக்கு வீடு வழங்கப்பட்டுள்ளது.