முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு உத்தியோகபூர்வ இல்லம் ஒன்றை வழங்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டை நிராகரித்த வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அதனை வழங்கியவர்களிடமே விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார்.
பாராளுமன்ற உறுப்பினர் சானக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்த கருத்து தொடர்பில் பாராளுமன்றத்தில் சிறப்புரிமைப் பிரச்சினையை எழுப்பிய அமைச்சர், அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லத்தில் தாம் ஒருபோதும் வசிக்கவில்லை எனவும் அவர் தனது சொந்த வீட்டில் வசிப்பதாகவும் தெரிவித்தார்.
நான் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தைப் பயன்படுத்தியதில்லை. வெளிநாட்டுப் பிரதிநிதிகளைச் சந்திக்கும் போது மற்றும் ஏனைய விடயங்களுக்காக நான் சில சமயங்களில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸின் உத்தியோகபூர்வ இல்லத்தையே பயன்படுத்துவேன்.
தாம் ஆக்கிரமித்துள்ள எந்தவொரு உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தையும் யாருக்கும் வழங்கவில்லை எனவும், அதற்கான அதிகாரமும் தனக்கு இல்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
“கோட்டாபய ராஜபக்சவுக்கு உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தை நான் எவ்வாறு வழங்க முடியும்? அவ்வாறு செய்வதற்கு நான் யார்? அதை வழங்கியவர்களிடம் விசாரிக்கப்பட வேண்டும்,”
பாராளுமன்ற சிறப்புரிமைகளுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு எம்.பி.க்கள் பொய்யான அறிக்கைகளை வெளியிடக் கூடாது என்ற கூறிய அமைச்சர், ஒவ்வொருவருக்கும் அவரவர் கௌரவம் உண்டு என்றும் தெரிவித்துள்ளார்.