மலர்ந்தும் மலராத இந்த வாழ்வு நிறைவேறாத ஆசைகளுடன் பாதியிலே வாடிவிடும். இது தான் மனித வாழ்வின் யதார்த்தம். ஆனால் உடம்பில் வாழ்ந்த ரூஹுகுக்கு என்றும் மரணமில்லை. அது கட்டம் விட்டு கட்டம் மாறினாலும் கூடவே வரும்.
மண்ணறையில் இருந்து எழுந்து வரும் ஆத்மாக்கள் விடிந்தும் விடியாத ஒரு காலைப் பொழுது அல்லது மறைந்தும் மறையாத ஒரு மாலைப் பொழுது தான் வாழ்ந்தோம் என்று கூறும். உலக வாழ்வு அற்பமானது, சொற்பமானது என காலம் கடந்த ஞானம் பேசும். அதனால் பயனேதும் இல்லை.
இது தான் சத்தியம். இந்த குறுகிய உலக வாழ்வு ஒரு பரீட்சைக்களம். அது சோசம் நிறைந்ததாகவே இருக்கும்.
இந்த உண்மையை புரிந்து கொள்வோம். அதில் வசந்தத்திற்கான பாதையை அமைத்துக் கொள்வதே மனித வாழ்வின் திட்டமாக அமைய வேண்டும். அப்போது தான் நிரந்தரமான இன்ப வாழ்வு மறுமையில் பரிசாக கிடைக்கும்.
அன்புக்குரிய தோழர்களே!
நாம் கண்ணியமான மாதங்களை அடைந்துள்ளோம். புனிதமான மாதங்களில் இறைவனுக்கு மிகவும் பிரியமான நாட்களில் நுழைந்துள்ளோம். ஆம் துல்ஹஜ் முதல் பத்து நாட்கள் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான நாட்கள்.
அதில் இறைவனை நெருங்குவோம். இறை திருப்தியை எதிர்பார்த்து அமல் செய்வோம்.
பிறர் மானம் காத்து நாவை பேணுவோம் புனிதம் நிறைந்த துல்ஹஜ் முதல் பத்து நாட்கள் நா காக்க பயிற்சி எடுக்கும் பரீட்சை நாட்களாகவே அமையட்டும்.
இஸ்லாம் புறம் பேசுவதை, அவதூறு கூறுவதை, கோள் சொல்லுவதை, மானபங்கப்படுத்துவதை, உளவு பார்ப்பதை, தீய எண்ணங் கொள்வதை மற்றும் வதந்தி பரப்புதை கடுமையாக தடுத்துள்ளது. ஆனால் பெரும்பாலான மக்கள் கூடும் பொதுத் தளங்களில் இத்தகைய அவலங்கள் வாடிக்கை ஆகிவிட்டது. தெரிந்தோ தெரியாமலோ அடுத்த சகோதரனின் மாமிசத்தை புசிக்கிறோம். இறைவன் வெறுக்கும் நாவின் விபரீதங்களை விட்டும் துரமாகுவோம்.
உள்ளங்களை சீர் செய்து கொள்வோம். அல்லாஹ்விடம் உண்மையான முறையில் பாவ மன்னிப்புக் கோரி மீளுவோம்.