தாய் மற்றும் தந்தையின் தாக்குதல்கள் காரணமாக வீட்டில் இருந்து தப்பி, ஹட்டன் ரயில் நிலையத்தில் தங்கியிருந்த 15 வயதான பாடசாலை மாணவனை ஹட்டன் பொலிஸார் இன்று (19) தமது பொறுப்பேற்றுக் கொண்டனர்
அனுராதபுரம் பிரதேசத்தில் வசித்து வந்த மாணவன் கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரை செல்லும் இரவு நேர தபால் ரயில் வந்து, ஹட்டன் ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கு தங்கியிருந்துள்ளார்.
மாணவனின் பெற்றோர் அனுராதபுரத்தில் வசிப்பதுடன் பாணந்துறையில் உள்ள பாட்டியின் வீட்டில் தங்கியிருந்து பாடசாலையில் கல்வி கற்று வந்துள்ளார்.
10 ஆம் தரத்தில் கல்வி கற்ற தன்னை பெற்றோர், பாடசாலையில் இருந்து விலகியதாக மாணவன் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் அனுராதபுரத்தில் உள்ள வீட்டிலும் பாணந்துறையில் உள்ள பாட்டியின் வீட்டிலும் தங்கியிருந்த போது, தன்னை வீட்டை விட்டு செல்லுமாறு தந்தை அழுத்தம் கொடுத்ததாகவும் மாணவன் கூறியுள்ளார்.
தந்தையும் தாயும் கொடூரமாக தாக்குவதாகவும் அவர்களின் கொடுமை தாங்க முடியாது கடந்த 17 ஆம் திகதி அனுராதபுரத்தில் இருந்து கொழும்பு கோட்டைக்கு வந்து, பாணந்துறையில் உள்ள பாட்டியின் வீட்டுக்கு செல்வதற்காக ரயிலில் ஏறிய போது, தவறுதலாக பதுளை செல்லும் ரயிலில் ஏறி விட்டதாகவும் மாணவன் குறிப்பிட்டுள்ளார்.
தாய் மற்றும் தந்தையின் சித்தரவதை காரணமாக மீண்டும் தன்னால் வீட்டுக்கு செல்ல முடியாது எனவும் மாணவன் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
மாணவனை தமது பொறுப்பில் எடுத்துக்கொண்ட பின்னர், தாக்குதல் காரணமாக மாணவனின் உடலில் ஏற்பட்டிருந்த சில காயங்களை அவதானித்த பொலிஸார், அவரை டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக மாணவனை காப்பகத்தில் ஒப்படைக்க உள்ளதாகவும் மாணவனின் பெற்றோரை ஹட்டன் பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.