இலங்கை விமானங்களின் தொடர்ச்சியான தாமதம் காரணமாக இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியிருப்பதால் கொழும்பில் இருந்து தென் கொரியாவிற்கு நேரடி விமான சேவையை இரண்டு மாதங்களுக்குள் ஆரம்பிக்க கொரிய அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தற்காலிக நடவடிக்கையாக தென்கொரியாவிற்கு செல்லும் இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களை இரண்டு வார கால அவகாசத்தின் பின்னர் சிங்கப்பூர் ஊடாக அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
“எங்கள் ஊழியர்களை ஸ்ரீலங்கன் விமானங்களில் சிங்கப்பூருக்கு அனுப்பி, அங்கிருந்து தற்காலிக நடவடிக்கையாக கொரிய விமானத்தில் செல்ல திட்டமிட்டுள்ளோம். இது இரண்டு வாரங்களுக்குப் பிறகு தொடங்கும்,” என குறிப்பிட்டுள்ளார்.
விமான தாமதம் காரணமாக புலம்பெயர் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் குறைகள் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் சரியான நேரத்தில் வரத் தவறியதால், இலக்கு நாட்டில் உள்ள அவர்களது முதலாளிகள் அவர்களை ஏற்க மறுத்ததால், விமானம் தாமதம் காரணமாக கடுமையான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தாமதம் மற்றும் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக பலமுறை முறைப்பாடு செய்தும் அதற்கு செவிசாய்க்கவில்லை என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.