புத்தளம் 80’s சஹீரியன்ஸ் ஹீரோஸ் அமைப்பினால் தோற்றுவிக்கப்பட்ட கல்வி மேம்பாட்டு குழுவினரின் செயற்பாடுகள் தொடர்பான மீளாய்வு நிகழ்வும், விருந்துபசார நிகழ்வும் கடந்த 16ஆம் திகதி புத்தளம் அநுராதபுர வீதி சிராம்பியடியில் அமைந்துள்ள அமைப்பின் சிரேஷ்ட அங்கத்தவர் எஸ்.எச்.எம்.ஜப்ரிஸின் எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் வளாகத்தில் இடம்பெற்றது.
புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையின் 1980 ம் ஆண்டு க.பொ.த.சாதாரண தர மாணவர்களின் பழைய மாணவர்களை உள்ளடக்கிய அமைப்பே “80 ஸ் சஹீரியன்ஸ் ஹீரோஸ்” அமைப்பாகும்.
அமைப்பின் இணை தலைவர்களான புத்தளம் வெட்டாளை அசன்குத்தூஸ் பாடசாலை பிரதி அதிபர் எம்.எஸ்.எம்.மொஹிதீன் மற்றும் இலங்கை மனித நேய அமைப்பின் பணிப்பாளர் ஆர்.எம்.எம்.பவாஸ் ஆகியோரின் இணைத்தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைப்பின் அங்கத்தவர்கள் மற்றும் அவர்களின் துணைவிமார் என 60 பேர் கலந்து கொண்டனர்.
அங்கத்தவர்களின் துணைவிமார்கள் பிரத்தியேகமாக இந்நிகழ்வில் கலந்து கொண்டு அறிமுகமாகி கொண்டதோடு 80’s சஹீரியன்ஸ் ஹீரோஸ் அமைப்பின் செயற்பாட்டுகளுக்கு பக்க பலமாக நின்று செயற்படவும் தீர்மானித்தனர்.
இந்நிகழ்வில் கல்வி உப குழுவின் செயற்பாடுகள் உள்ளிட்ட மேலதிகமாக மேற்கொள்ளப்படவுள்ள செயற்பாடுகள், பெற்றோர்களுக்கான விழிப்புணர்வுகளை மேற்கொள்ளல், நடைமுறையிலுள்ள ஜனாஸா வீடுகளுக்கான போசனம் வழங்குதலை விரிவுபடுத்தல், குழுமத்துக்கான தேவைப்பாடுகள் தொடர்பாகவும் இங்கு விரிவாக ஆராயப்பட்டன.
பொறியியல் துறை, மருத்துவ துறை உள்ளிட்ட இலங்கையின் கல்வி அடைவு மட்டங்கள் குறிப்பாக எஸ்.எல்.ஈ.எஸ், எஸ்.எல்.ஓ.எஸ், எஸ்.எல்.ஏ.எஸ், எஸ்.எல்.பீ.எஸ் போன்ற துறைகளுக்கு மாணவர்களை உள்வாங்க செய்வதற்கான சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ஆக்க பூர்வமான கலந்துரையாடலும் இங்கு மேற்கொள்ளப்பட்டன.
புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவர்கள் அமைப்புகளில் மிக பழைமை வாய்ந்த அமைப்பாகவும், அனுபவஸ்தர்களை உள்ளடக்கிய அமைப்பாகவும் விளங்கும் 80’s சஹீரியன்ஸ் ஹீரோஸில் இஸ்லாமிய, இந்து, கிறிஸ்தவ மதங்களை சார்ந்தவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகள் மற்றும் இரா போசனத்துக்கான பூரண அனுசரனையினை அமைப்பின் சிரேஷ்ட அங்கத்தவரும், சிராம்பியடி எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் உரிமையாளருமான எஸ்.எச்.எம்.ஜப்ரிஸ் வழங்கி இருந்தார்.
எம்.யூ.எம்.சனூன்