முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சில இராணுவ முகாம்களில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட விகாரைகளின் தாழ்வான பகுதிகள் மனித புதைகுழிகளாக இருக்கலாம் என வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
வட்டுவாகல், கேப்பாபுலவு உள்ளிட்ட இராணுவ முகாம்களில் பாரியளவிலான விகாரைகள் நிர்மாணிக்கப்படுவதை ரவிகரன் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகளை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கொக்குத்தொடுவாய் நீண்ட காலமாக சூனியப் பிரதேசமாக இருந்த பிரதேசமாகும். 1984 டிசம்பரில் இங்கிருந்து தமிழ் மக்கள் அனைவரையும் இராணுவம் வெளியேற்றியது.
அன்றிலிருந்து நீண்ட காலமாக கொக்கு தொடுவாய் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் ஆள் நடமாட்டம் இன்றி சூனிய பிரதேசமாகவே காணப்படுகின்றது.
2009 இல் யுத்தம் முடிவடைந்த போது சரணடைந்தவர்களை பேருந்துகளில் ஏற்றி சில இடங்களுக்கு அழைத்துச் சென்றதை நாம் அறிவோம்.
சரணடைந்தவர்கள் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டு பின்னர் இராணுவ சூனிய பிரதேசமான இங்கு கொண்டு வந்து புதைக்கப்பட்டிருக்க கூட வாய்ப்புகள் உள்ளன.
தற்போது இங்கு அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்படும் போது பல மனித எச்சங்கள் காணப்படுவதை அவதானிக்க முடிகிறது.
மேலும் இங்கு அகழாய்வு பணிகள் முறையாக நடப்பதாக எங்களுக்கு தெரியவில்லை. இங்கு தோண்டப்பட்ட மனித எச்சங்கள் பாதுகாப்பற்ற பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.
எனவே இந்த அகழாய்வு முடிவுகள் சரியாக இருக்குமா என்ற சந்தேகம் எமக்கு உள்ளது.
இந்த அகழ்வு பணிகளில் சர்வதேச நிபுணர்களை ஈடுபடுத்த வேண்டும் என்பதும், சர்வதேச நிபுணத்துவத்தின் அடிப்படையில் சர்வதேச விதிமுறைகளை பின்பற்றி இந்த அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதும் எங்களது கோரிக்கையாகும்.
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது சரணடைந்த விடுதலைப் புலிகள் போராளிகள் கொல்லப்பட்டு இங்கு புதைக்கப்பட்டிருக்கலாம் என மக்கள் சந்தேகிக்கின்றனர்.