போதைப் பொருள் பயன்பாடு மற்றும் அதனுடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளை சட்டத்தின் பிடிக்குள் கொண்டு வர விசேட வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தியுள்ளதாக பாதுகாப்பு பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
போதைப் பொருளுக்கு அடிமையான இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் சில தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் பொலிஸாருக்கு மத்தியில் இருக்கலாம் என்பதால், இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் போதைப் பொருளுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
போதைப் பொருள் விற்பனையுடன் சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் சில மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டனர்.
கடமையில் ஈடுபடும் போது கைது செய்யப்படும் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் மற்றும் போதைப் பொருள் விற்பனையாளர்களுடன் ஏற்படும் தொடர்புகளால், இந்த பொலிஸ் அதிகாரிகள் போதைப் பொருள் பழக்கத்திற்கு ஆளாகி இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் போதைப் பொருளை பரீட்சித்து பார்ப்பதால், பொலிஸ் அதிகாரிகள் அதற்கு அடிமையாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.
எது எப்படி இருந்த போதிலும் பொலிஸ் திணைக்களத்தில் புதிதாக இணைந்துக்கொண்டுள்ள பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மத்தியில் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் சுமார் 500 பேர் வரை இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன.