போக்குவரத்து அனுமதிப்பத்திரமின்றி சேவையில் ஈடுபடும் நபர்களுக்கெதிராக தற்போது நடைமுறையிலுள்ள 10,000 ரூபா தண்டப்பணத்தை 5,00,000 ரூபாவாக அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதற்கிணங்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதற்கு நவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றபோது, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, சாரதியின் முழுமையான கவனயீனம் காரணமாகவே மன்னம்பிட்டி பஸ் விபத்து ஏற்பட்டுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவருகின்றது.
அந்த விபத்து தொடர்பில் முழுமையான விசாரணையை மேற்கொண்டு அறிக்கையொன்றை பெற்றுத்தருமாறு நான் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளேன் என்று மேலும் தெரிவித்தார்.