இஸ்லாமிய புதுவருடத்தை முன்னிட்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் செய்தி!

Date:

மலர்ந்திருக்கும் ஹிஜ்ரி 1445 இஸ்லாமிய புதுவருடத்தில் நம் நாட்டிலும் உலகளாவிய ரீதியிலும் சமாதானமும் ஐக்கியமும் மலர்வதோடு நாட்டின் அனைத்து விதமான நெருக்கடியான நிலைமைகளும் நீங்கி மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடனும் சுபீட்சத்துடனும் வாழ வல்ல அல்லாஹ் அருள் புரிவான்.

இஸ்லாமிய புதுவருடத்தை முன்னிட்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளது.

ஹிஜ்ரி நாட்காட்டி என்பது இஸ்லாத்தின் மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்த ஹிஜ்ரத்தை அடிப்படையாகக் கொண்டு கலீஃபா உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சிக்காலத்தில் ஏற்படுத்தப்பட்ட நாட்கணிப்பு முறையாகும்.

ஒவ்வொரு சமுதாயத்தினருக்கும் அவரவர் கலாசாரங்கள், பண்பாடுகளின் அடிப்படையில் காலக் கணக்கீட்டு முறைகள் இருப்பதைப் போன்று முஸ்லிம்களுக்கும் தனித்துவமான ஒரு நடைமுறை இருக்கவேண்டும் என்பதற்காக இஸ்லாமிய வரலாற்றின் மறுமலர்ச்சியாக அமைந்த ஹிஜ்ரத்தை அடிப்படையாக வைத்து இந்நாட்காட்டி முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

அந்தவகையில் புதிய ஹிஜ்ரி ஆண்டின் தொடக்கமானது, ஹிஜ்ரத் எனும் மதீனாவை நோக்கிய ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இடம்பெயர்வையும் உலகத்திற்கே முன்மாதிரியாக நிறுவப்பட்ட மதீனா சாசனத்தையும் எமக்கு நினைவுபடுத்துகிறது.

ஒரு ஹிஜ்ரி ஆண்டில் முஹர்ரம் (ஆண்டின் முதல் மாதம்), ஸபர், ரபீஉனில் அவ்வல், ரபீஉனில் ஆகிர், ஜுமாதல் ஊலா, ஜுமாதல் ஆகிரா, ரஜப், ஷஃபான், ரமழான், ஷவ்வால், துல் கஃதா, துல்ஹிஜ்ஜஹ் ஆகிய பன்னிரண்டு சந்திர மாதங்கள் உள்ளன.

இவற்றில் முஹர்ரம், ரஜப், துல் கஃதா, துல்ஹிஜ்ஜஹ் ஆகிய மாதங்களை இஸ்லாம் புனித மாதங்களாக அடையாளப்படுத்தியிருக்கிறது. ஒவ்வொரு மாதமும் பிறை பார்ப்பதன் மூலம் அந்தந்த மாதத்தின் ஆரம்பம் தீர்மானிக்கப்படுகிறது.

ஹிஜ்ரி நாட்காட்டி முஸ்லிம்களின் அன்றாட வாழ்வியலின் அடையாளமாகும். ஸகாத், நோன்பு, ஹஜ் போன்ற வருடாந்த வணக்க வழிபாடுகள் ஹிஜ்ரி பிறைக் கணக்கை அடிப்படையாகக் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது.

இஸ்லாமிய சந்திர நாட்காட்டியின் ஒரு மாதம் 29 அல்லது 30 நாட்களாகும். அந்தவகையில் ஓர் ஆண்டு 354 அல்லது 355 நாட்களைக் கொண்டிருக்கும்.

எனவே ஹிஜ்ரி நாட்காட்டியின் ஒரு வருடம், கிரிகோரியன் சூரிய நாட்காட்டியின் மொத்த நாட்களின் எண்ணிக்கையிலிருந்து பத்து அல்லது பதினொரு நாட்கள் குறைந்து காணப்படும்.

இவ்வாறு நாள், வாரம், மாதம், வருடம் என காலங்கள் மாற்றமடைவது மனிதர்கள் புத்துணர்ச்சி பெறுவதற்கும், எண்ணங்கள் புதுப்பிக்கப்படுவதற்கும் அதன் மூலம் அல்லாஹ்வின் பக்கம் மனிதர்கள் மீளவேண்டும் என்பதற்காகவுமே என்று அல்குர்ஆன் குறிப்பிடுகிறது.

‘இன்னும் சிந்திக்க விரும்புபவருக்கு அல்லது நன்றி செலுத்த விரும்புபவருக்கு அவன்தான் இரவையும் பகலையும் அடுத்தடுத்து வருமாறு ஆக்கினான்.’ (ஸுறா புர்கான்: 62)

ஆக நாம் அடைந்திருக்கும் இப்புதுவருடத்தில் புத்துணர்வு பெற்று, அல்லாஹ்வின் பக்கம் மீள்வதோடு நல்லெண்ணம், நியாயம், நீதி, சகவாழ்வு, தேசப்பற்று போன்ற பண்புகளை எமது வாழ்வில் கடைபிடித்து நம் தாய்நாடான இலங்கைக்கும் முழு உலகிற்கும் பிரயோசனமுள்ளவர்களாகவும் முன்மாதிரி பிரஜைகளாகவும் வாழ்ந்து மரணிக்க அல்லாஹு தஆலா எம்மனைவருக்கும் துணை நிற்பானாகவென வாழ்த்துச்செய்தியில் குறிப்பிடப்படப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...