ஊழியர் சேமலாப மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் தொடர்பிலான சட்டமூலத்தில் திருத்தங்களை கொண்டுவர ஐக்கிய மக்கள் சக்தி உத்தேசித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷடி சில்வா தெரிவித்தார்.
இச்சட்டமூலத்துக்கு திருத்தங்களை கொண்டுவருவதன் ஊடாக நாட்டின் தொழிலாளர் வர்க்கத்துடன் கைகோர்த்து செயல்பட உள்ளோம் என்றும் அவர் கூறினார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தின் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“196 இலட்சம் கணக்குகள் ஊழியர் சேமலாப நிதியத்தில் உள்ளன. இவற்றில் 26 இலட்சம் கணக்குகள் செயல்படும் கணக்குகளாகும்.
உள்நாட்டு கடன் மறுசீரமைக்கப்படும் 15 வருடக்காலப்பகுதியில் அதாவது 2038ஆம் ஆண்டுவரை இந்த செயல்படும் கணக்குகளுக்கு கிடைக்கும் பிரதிபலன்கள் உரிய வகையில் கிடைப்பதற்கான ஏற்பாடுகளை செய்வதற்காகவே சட்டமூலத்தில் திருத்தங்களை முன்மொழிய தீர்மானித்துள்ளோம்.
சந்தையில் ஏனையவர்களுக்கு வழங்கப்படும் வட்டி வீதத்தை ஊழியர் சேமலாப நிதியத்தின் கணக்கு உரிமையாளர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்தல் அல்லது குறைந்தபட்ச சலுகைகளை உறுதி செய்தல் அல்லது பணவீக்கத்துக்கு ஏற்ப வட்டி வீதத்தை வழங்குவதை உறுதிப்படுத்துவதே எதிர்க்கட்சியின் நோக்கமாகும்” என தெரிவித்தார்.