துருக்கிக்கு சென்று நாடு திரும்பிய உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, அந்நாட்டில் இருந்த முன்னாள் உக்ரைன் போர் தளபதிகள் 5 பேரை தன்னுடன் அழைத்து வந்தார்.
கடந்தாண்டு மரியுபோலை ரஷ்ய படைகள் கைப்பற்றிய போது, அங்கு போரிட்ட வீரர்களும் போர் தளபதிகளும் சரணடைந்தனர்.
துருக்கி நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு கைதிகள் பரிமாற்றத்தின் கீழ் சிலரை விடுவித்த ரஷ்யா, போர் முடியும் வரை, போர் தளபதிகள் துருக்கியில் இருக்க உத்தரவிட்டது.
இந்நிலையில், துருக்கிக்கு சென்று அந்நாட்டு அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்திய, ஜெலென்ஸ்கி , தளபதிகளுடன் நாடு திரும்பினார்.
உக்ரைனின் லிவிவ் நகரில் வீரர்களை வரவேற்கும் விழா நடை பெற்றது. அங்கு பேசிய ஜெலென்ஸ்கி , அவர்களை நாட்டின் ஹீரோக்கள் என்று பாராட்டினார்.
உக்ரைன் மீது ரஷியா போர் தொடங்கி சுமார் 500 நாட்களை நெருங்கியுள்ளது. என்றாலும், இதுவரை சண்டை முடிவுக்கு வரவில்லை.
உக்ரைன் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு மிகப்பெரிய அளவில் இராணுவ உதவி செய்து வருகிறது. இராணுவ உதவி கேட்பதற்காக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
துருக்கி சென்ற அவரை, அந்நாட்டு அதிபர் எர்டோகன் வரவேற்றார். அப்போது உக்ரைன் நேட்டோ படையில் இணைய சம்மதம் தெரிவித்தார். அதோடு நேட்டோவில் இணைய தகுதியான நாடு எனவும் தெரிவித்தார்.