முல்லைத்தீவு மாவட்டம், கொக்குத்தொடுவாயில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சட்ட வைத்திய அதிகாரி, தடய வைத்திய நிபுணர்கள் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு உட்பட ஏனைய நிபுணர்களை இந்த சந்தர்ப்பத்தில் கலந்துக்கொள்ளுமாறு முல்லைத்தீவு நீதவான் டி.சரவணராஜா உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் 29ஆம் திகதி நீர் வழங்கல் திணைக்கள ஊழியர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் மத்திய கொக்குத்தொடுவாய் பகுதியில் நிலத்தடி குடி தண்ணீர்க் குழாய்களைப் பொருத்துவதற்காக வீதியோரம் குழி தோண்டப்பட்ட போது இந்த மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் பொலிஸார் அந்த இடத்தை அடையாளப்படுத்தி கடந்த ஜூன் மாதம் 30ஆம் திகதியன்று முல்லைத்தீவு நீதவான் டி.சரவணராஜா அந்த இடத்தை அவதானித்ததாகவும், அங்கு எலும்புகள் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.
குறித்த காணியை பாதுகாக்குமாறும் நீதவான் உத்தரவிட்டிருந்தார். பாரிய புதைகுழி என சந்தேகிக்கப்படும் இடத்திலிருந்து கடந்த 29ஆம் திகதி பெண்கள் மற்றும் ஆண்களின் ஆடைகளும் எலும்பு உள்ளிட்ட மனித எச்சங்கள் என்பன பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உள்நாட்டுப் போரால் பெரிதும் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் இவ்வாறான மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து , போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களும், காணாமல் போனவர்களின் குடும்பங்களின் உறவினர்களும் அச்சத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.