கிழக்கின் புதிய ஆளுநராக பொறுப்பேற்றுள்ள செந்தில் தொண்டமான் அவர்களுக்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான அலி ஸாஹிர் மௌலானாவுக்கும் இடையிலான சிநேகபூர்வ சந்திப்பு இன்று வியாழக்கிழமை திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது புதிய ஆளுநருக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் அலி சாஹிர் மௌலானா, தன்னுடனான நீண்டகால நட்பினை வெளிப்படுத்தியதுடன் கிழக்கிலே மாகாண சபை பிரதிநிதிகளை கொண்ட சபை இயக்கத்தில் இல்லாத தருணத்தில் அதில் அனுபவத்தை கொண்ட சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த ஒருவர் கிழக்கின் ஆளுநராக கிடைத்துள்ளமைக்காக தமது மகிழ்ச்சியையையும் தெரிவித்தார்.
புதிய ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் கிழக்கிலே மேற்கொள்ளப்படும் ஆக்கபூர்வமான செயற்பாடுகளுக்கு தமது பாராட்டுக்களையும் நன்றிகளையும் அவர் தெரிவித்தார்.
மக்கள் சார்ந்த பல்வேறு விடயங்கள் , மாகாண நிருவாக செயற்பாட்டிலே நீண்டகாலமாக கிடப்பிலே உள்ள சில விடயங்கள் குறித்தும் அலி சாஹிர் மௌலானா அவர்கள் ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு வந்ததை அடுத்து உடனடியாக அவ்விடத்திற்கு செயலாளர்கள் மற்றும் விடயத்திற்கு பொறுப்பான அதிகாரிகளை அழைத்து கலந்துரையாடிய ஆளுநர் தொண்டமான், தீர்வுகளையும் , அடுத்த கட்ட நகர்வுகளையும் துரிதமாக முன்னெடுக்குமாறு பணிப்புரையும் வழங்கினார்.
அனைவரையும் அனுசரித்து பேதங்கள் அற்ற முறையில் தனது பதவிக்காலத்தினுள் கிழக்கிலே வினைத்திறன் மிக்கதாகப் பணியாற்ற திடசங்கற்பம் பூண்டுள்ளதாகவும் ஆளுநர் இங்கு குறிப்பிட்டார்,
குறித்த சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானாவுடன் ஏறாவூர் நகர சபையின் முன்னாள் தவிசாளர் நழீம் , மற்றும் செய்யிட் அஹமட் ஸாஹிர் மௌலானா ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
(உமர் அறபாத் )