இலங்கை முஸ்லிம் சமூகம் தமக்குள் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றங்களை மேற்கொண்டு நாட்டைக் கட்டியெழுப்புவதில் உறுதுணை புரியும் வருடமாக இந்தப் புதிய வருடம் அமைய வேண்டும் என முஸ்லிம் சமய கலாச்சாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் பைஸல் ஆப்தீன் தெரிவித்துள்ளார்.
இன்று மலர்ந்திருக்கின்ற இஸ்லாமிய புதுவருட வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஹிஜ்ரி 1445 இஸ்லாமியப் புது வருடம் இன்று ஆரம்பிக்கின்றது. உலகத்துக்கு வழகாட்டியாக வந்த இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் புதியதொரு மாற்றத்துக்காக மக்காவில் இருந்து மதீனாவுக்கு மேற்கொண்ட ஹிஜ்ரத் எனும் புலம்பெயர்வை இன்றைய தினம் ஞாபகப்படுத்துகிறது.
இலங்கை மக்கள் நெருக்கடிகள் நிறைந்த வாழ்க்கையொன்றை கடந்து கொண்டிருக்கிறார்கள்.
புதியதொரு மாற்றத்தை அவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களின் இந்த எதிர்பார்ப்புக்கள் நிறைவேற வேண்டும், புதிய நம்பிக்கைகளும் புதிய உத்வேகமும் இந்தப் புதுவருடத்தில் மக்களிடேயே துளிர்க்க வேண்டும்.
ஒரு சமுதாயம் தன்னிடமுள்ளவற்றை மாற்றிக் கொள்ளாதவரை அல்லாஹ்தஆலாவும் அவர்களில் மாற்றத்தை ஏற்படுத்த மாட்டான் என அல்லாஹுத்தலா கூறுகிறான்.
அந்த வகையில் இலங்கை முஸ்லிம் சமூகம் தமக்குள் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றங்களை மேற்கொண்டு நாட்டைக் கட்டியெழுப்புவதில் உறுதுணை புரியும் வருடமாக இந்தப் புதிய வருடம் அமைய வேண்டும் என பணிப்பாளர் தமது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.