மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் ஜனாதிபதி முகமது பாசும் தலைமையிலான ஆட்சி நடந்து வந்தது.
ஆனால் அந்த நாட்டின் இராணுவம் திடீரென அரசாங்கத்திற்கு எதிராக திரும்பியது.
இதனால் ஜனாதிபதி முகமது பாசுமை இராணுவம் சிறை வைத்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் நைஜர் இராணுவ வீரர்கள் குழு அங்குள்ள அரசாங்க தொலைக்காட்சியில் நேரலையில் பேசினர்.
அப்போது, கைது செய்யப்பட்ட ஜனாதிபதி முகமது பாசும் தனது பதவியில் இருந்து அகற்றப்பட்டுள்ளார்.
எனவே அங்கு இராணுவ ஆட்சி கொண்டு வரப்பட்டுள்ளது என வெளிப்படையாக அறிவித்தனர்.
மேலும் இது தங்களது உள்நாட்டு விவகாரம் என்றும் மற்ற நாடுகள் இந்த விஷயத்தில் தலையிட வேண்டாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே அங்குள்ள தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் முற்றிலும் முடக்கப்பட்டன.
நாட்டில் இயல்பு நிலை திரும்பும்வரை அங்கு வான் மற்றும் தரை எல்லைகள் மூடப்படும் எனவும், இரவு நேர ஊரடங்கு அமுலில் இருக்கும் எனவும் இராணுவத்தினர் அறிவித்தனர்.
இராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான பொதுமக்கள் தலைநகர் நியாமியில் போராட்டம் நடத்தினர்.
ஆனால் இராணுவம் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி போராட்டத்தை கலைத்தது. இதனால் நைஜர் இராணுவத்துக்கு அமெரிக்கா, ஆப்பிரிக்க ஒன்றியம், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை கடும் கண்டனம் தெரிவித்தன.
இதனையடுத்து ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் தெரிவிக்கையில்,
ஜனநாயகத்துக்கு இடையூறு விளைவிக்கும் அனைத்து செயல்களையும் இராணுவத்தினர் நிறுத்த வேண்டும். மேலும் ஜனாதிபதி முகமது பாசுமை எந்த ஒரு நிபந்தனையும் இன்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்’ என கண்டனம் தெரிவித்துள்ளார்.