எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வரை இலங்கைக்கு போதியளவு மழைவீழ்ச்சி பதிவாகாது என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
பருவப் பெயர்ச்சியின் போதும் போதியளவு மழை பெய்யவில்லையென திணைக்களத்தின் பணிப்பாளர் ஷிரோமனீ ஜயவர்தன கூறினார்.
இதனிடையே, நாட்டில் தற்போது நிலவும் வறட்சி காரணமாக நீரேந்துப் பகுதிகளின் நீர்மட்டம் சடுதியாக குறைவடைந்து வருகின்றது.
இதேவேளை, மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 20 வீதம் வரை குறைவடைந்துள்ளதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, கடந்த காலங்களில், இந்த நீர்த்தேக்கத்துக்கு எதிர்பார்த்த மழைவீழ்ச்சியில் 50 வீதம் மாத்திரமே நீர் கொள்ளளவு பெற்றிருந்தது என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்திருந்தார்.
அதன்படி, போதிய நீர் கொள்ளளவு இல்லாததால், அடுத்த வாரத்தில் இந்த இழப்புகள் ஏற்படப் போவதுடன், மின் உற்பத்தி தடைபடுவதால், இழப்பு மேலும் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சமனலவெவ நீர்த்தேக்கத்தில் இருந்து உடவலவ நீர்த்தேக்கத்திற்கு நீர் திறந்துவிடப்பட்டால் தென் மாகாணத்தில் ஒரு மணித்தியாலம் முதல் மூன்று மணித்தியாலங்கள் வரை மின்சாரம் துண்டிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் கடுமையான வறட்சியான காலநிலை நிலவி வருவதுடன், நீர்த்தேக்கங்களின் நீர்மட்டங்களும் குறைந்துள்ளன.
அத்தயாவசிய தேவைக்கு மாத்திரம் தண்ணீரை பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.