இந்தோனேசியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளின் பாதையை பின்பற்றி, போட்டித்தன்மைமிக்க, புதிய சந்தை வாய்ப்புகளையும், வெளிநாட்டு முதலீடுகளையும் ஈர்க்கத் திட்டமிட்டுள்ளது“ என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
நிலையான அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில் “இலங்கையின் நிலையான அபிவிருத்தி நோக்குநிலை” என்ற தலைப்பில் அலரி மாளிகையில் நேற்று (29) நடைபெற்ற நிபுணர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.
“இலங்கை இனிமேலும் ஏனைய நாடுகளுக்கு சுமையாக இருக்கக் கூடாது. பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகள் செயற்பட்டமை போன்று, உள்நாட்டு வளங்களைப் பயன்படுத்தி ஒரு நாடாக நாமும் தனித்து முன்னேற முயற்சிக்க வேண்டும்.
நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அழைப்பு விடுத்துள்ள கலந்துரையாடலில் நானும் பங்கேற்கிறேன். நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் நிலையான அபிவிருத்தி இலக்குகளை நாம் இப்போது அடைந்து வருவதோடு, அதன் பிரதிபலன்களும் பாராட்டுக்குரியவை.
ஆனால் இன்று உலகம் பல மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளது. நிலையான அபிவிருத்தி இலக்குகளுக்கு கூடுதலாக, காலநிலை மாற்றத்தின் பொதுவான பிரச்சினைகளை கலந்துரையாட பரிஸ் காலநிலை மாநாடு மற்றும் கிளாஸ்கோ மாநாடு ஆகியவை நடத்தப்படுகின்றன.
இது தவிர, உலகம் முழுவதும் பரவிய கொவிட் தொற்றின் பாதிப்பையும் நாம் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. கொவிட் தொற்றினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடாக இலங்கை உள்ளதுடன், எமது நாட்டின் பொருளாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
அனைத்து நாடுகளும் இதனால் பாதிக்கப்பட்டதோடு, இதன் மூலம் உலகப் பொருளாதாரத்தில் பெரும் பின்னடைவு ஏற்பட்டதையும் நாம் அறிவோம்.
ஐரோப்பாவின் பொருளாதாரம் இன்றளவிலும் சரிவை எதிர்கொள்கிறது. மறுமுனையில் பொருளாதாரத்தில் சரிவு ஏற்பட்டிருந்தாலும், அதிர்ஷ்டவசமாக அமெரிக்கா இருந்த நிலையை விடவும் தற்போது ஓரளவு முன்னேற்றம் கண்டுவருகிறது.
சீனா இன்னும் மீண்டு வரவில்லை. எனவே, உலகப் பொருளாதார முன்னேற்றம் தடைப்பட்டுள்ளதுடன், அதனால் பெரும் பாதிப்புக்களையும் எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.
அவ்வாறென்றால், நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு நாம் எவ்வாறு நிதியைப் பெற்றுக்கொள்வது மற்றும் காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளைத் தணிக்கவும் உலகளாவிய நிதிக் கடன் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு நிதி நிவாரணங்களை பெற்றுக்கொள்ளும் முறைமைகளை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
இலங்கை எதிர்கொண்ட கடன் நெருக்கடியின் விளைவாக, இந்நாட்டின் பொருளாதாரத்தை முழுமையாக மறுசீரமைக்க நாங்கள் எதிர்பார்ப்பதோடு, அதற்கான நடவடிக்கைகளை ஏற்கனவே எடுத்து வருகிறோம். சில நாடுகள் பின்பற்றிய பாதை குறித்து நாம் கவனம் செலுத்தியுள்ளதோடு, இதன்போது உயர் போட்டித்தன்மையுடைய பொருளாதாரத்தைக் கொண்ட நாடாகவும் எம்மால் மாற முடியும்.
மற்ற நாடுகளுக்கு நாம் சுமையாக இருக்கக்கூடாது. ஒரு நாடாக, பிற நாடுகளின் உதவியைப் பெற நாம் இனிமேலும் நினைக்கக் கூடாது. நம் நாட்டின் முன்னேற்றத்தை நாமே ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
உலகின் பல நாடுகள் அதைச் செய்துள்ளதோடு, இவ்விடயத்தில், போரினால் முற்றாக அழிந்த வியட்நாமை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும்.
நமது நாடு இந்து மற்றும் பசுபிக் சமுத்திரங்களுக்கு இடையில் அமைந்துள்ளது. எனவே, எமக்கு பொருளாதார வளர்ச்சியை உருவாக்க பல வாய்ப்புகள் உள்ளன.
நாம் இருக்கும் கிழக்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில், இன்று பரவலான வளர்ச்சி ஏற்பட்டு வருவதை உங்களால் பார்க்க முடியும். இந்தியா இன்று பொருளாதார ரீதியில் வலுவடைந்து வருவதோடு, இந்து சமுத்திரப் பிராந்தியம், எதிர்காலத்தில் உயர் பொருளாதார வளர்ச்சிப் பிராந்தியமாக உருவெடுக்கும்.
தற்போது நாம் அனைவரும் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவது, காலநிலை மாற்ற பாதிப்பைத் தணிப்பது மற்றும் உலகளாவிய கடன் நெருக்கடி ஆகியவை தொடர்பாக மதிப்பாய்வு செய்ய வேண்டிய நேரம் இது என்று கூற வேண்டும்.
நாம் அதிலிருந்து விலகாமல், இதற்காக கூட்டாகவும் குழுவாகவும் செயல்பட வேண்டும். அதற்காக நாம் ஒரு அணியாக புதிய மூலோபாயங்கள் ஊடாக முன்னோக்கிச் செல்வோம் என்று நான் அனைவரையும் அழைக்கின்றேன் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.