கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபரொருவரின் மரணத்திற்கு ஒவ்வாமையே காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.
சம்பந்தப்பட்ட நோயாளியின் சிகிச்சைக்காக Ceftazidime என்ற நுண்ணுயிர் எதிர்ப்பி(antibiotics) தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜி. விஜேசூரிய இது தொடர்பில் தெரிவிக்கையில்,
உயிரிழந்தவரின் உடல் பாகங்கள் மேலதிக விசாரணைகளுக்காக மருத்துவ ஆராய்ச்சி திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கடந்த 11ஆம் திகதி, குறித்த நோயாளி செஃப்டாசிடைம் என்ற நுண்ணுயிர் எதிர்ப்பி(antibiotics) தடுப்பூசியைப் தொடர்சியாக பெற்றக்கொண்டதனால் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 67 வயதுடைய நீரிழிவு நோயாளி எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், ஒரு காலில் காயம் ஏற்பட்ட நிலையில் கடந்த 6ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அன்றைய தினம் முதல் 11ஆம் திகதி வரை பத்து தடவைகள் உரிய தடுப்பூசி போடப்பட்டிருந்தது.
11வது ஊசி போட்ட ஐந்து நிமிடங்களில் நோயாளி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதையடுத்து, இந்த நுண்ணுயிர் எதிர்ப்பி(antibiotics) மருந்தின் பாவனையை நேற்று முதல் நிறுத்தி வைக்க வைத்தியசாலை நிர்வாகம் முடிவு செய்திருந்தது.
இதற்கு முன்னரும் மருந்து ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலைகளில் பல நோயாளிகள் உயிரிழந்துள்ளதுடன், இது தொடர்பில் ஆராய சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டது.
குழுவின் அறிக்கை அண்மையில் அமைச்சரிடம் கையளிக்கப்பட்டதுடன், ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடாத்திய அதன் உறுப்பினர் பேராசிரியர் சந்திம ஜீவாந்த, சர்ச்சைக்குரிய 6 மரணங்களில் 2 மரணங்கள் ஒவ்வாமையினால் ஏற்பட்டவை என தெரிவித்தார்.