நாட்டின் 09 மாவட்டங்களில் இன்று (28) வெப்பச் சுட்டெண், மனித உடலுக்கு அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் காணப்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, அநுராதபுரம், பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை, பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் இன்று வெப்பச் சுட்டெண் 39 முதல் 45 செல்சியஸ் வரையில் காணப்படும் என அந்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறும், முடிந்தவரை நிழலான இடங்களை பயன்படுத்துமாறும், சிறு குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்துமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
சூரியன் தெற்கில் நகரும் நிலையில், இன்று முதல் செப்டெம்பர் 07 ஆம் திகதி வரை இலங்கைக்கு அண்மித்த அட்சரேகைக்கு நேரடியாக சூரியன் உச்சம் கொடுக்கும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று நண்பகல் 12:11 மணிக்கு கோவிலன் முனை மற்றும் மல்லாகம் ஆகிய பிரதேசங்களில் சூரியன் உச்சம் கொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வறட்சியான காலநிலையுடன், நாடளாவிய ரீதியில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 290,000ஐ தாண்டியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நாட்டின் 19 மாவட்டங்களில் 84,646 குடும்பங்களைச் சேர்ந்த 291,720 பேர் வறட்சியான காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.