வறட்சியான காலநிலை காரணமாக கால்நடைகளின் இறைச்சியை உண்பதில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், விஷம் கலந்து விலங்குகளை வேட்டையாடுவதற்கு சிலர் தூண்டப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான இறைச்சியை உண்பதன் காரணமாக உயிருக்கு ஆபத்து ஏற்படுமெனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குறிப்பாக வில்பத்து, யால, உடவலவ போன்ற பாதுகாக்கப்பட்ட சரணாலயங்கள் மற்றும் காடுகளில் வன விலங்குகளுக்கு போதுமான அளவு நீர் கிடைப்பதில்லை எனவும் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
வன விலங்குகள் நீரில் விஷம் கலந்தும், தீ வைத்தும் கொல்லப்படுவதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கொலை செய்யப்படும் விலங்குகளின் இறைச்சி மாத்தறை, அம்பாந்தோட்டை, புத்தளம், அனுராதபுரம், மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை பிரதேசங்களுக்கு பிரவேசிக்கும் சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் உபுல் ரோஹன சுட்டிக்காட்டியுள்ளார்.
விஷம் வைத்து கொல்லப்படும் விலங்குகளின் இறைச்சியை சாப்பிடுவதால், மனிதர்கள் உயிரிழக்க நேரிடும் அல்லது உடல் உபாதைகள் ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், தெரியாத பகுதிகளுக்குச் சென்று இறைச்சி உண்பதனை தவிர்க்குமாறும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.